அழகிரி ஆபீஸை வங்கிக்கு வாடகைக்கு விடப் போறாங்களாம்...!
மதுரை: மு.க. அழகிரியின் எம்.பி. அலுவலகமாக செயல்பட்டு வந்த இடத்தை கையகப்படுத்திய மாநகராட்சி தற்போது அதனை வங்கிக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது.
மதுரை மேல மாரட் வீதியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் புதிதாக கட்டப்பட்ட போது அதன் கீழ் தளத்தை மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மதுரை மாநகராட்சியையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.
அதன்பிறகு அந்த அலுவலகத்தை அழகிரி பயன்படுத்தாமல் வைத்திருக்கிறார் என்று கூறி, அந்த அலுவலகத்தை மதுரை மாநகராட்சி கைப்பற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு டயாலசிஸ் மையமாக மாற்றி அமைக்கப் போவதாக சொன்னது. அதற்காக கடந்த 2012 ஏப்ரல் 25ஆம் தேதி மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி அலுவலகத்தையும் கைப்பற்றினார்கள். ஆனால், இதுவரையில் அவர்கள் சொன்னபடி அங்கே டயாலிசிஸ் மையம் அமைக்கவில்லை.
ஓராண்டாக அந்த கட்டிடம் பயன்பாடின்றி சும்மாவே கிடந்தது. சொன்னபடி மருத்துவ மையம் அமைக்க முடியாததற்குக் காரணங்களை அடுக்கியுள்ள மாநகராட்சி நிர்வாகம், தற்போது அந்த இடத்தை வங்கிக்கோ அல்லது ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது.