சித்தராமையா அமைச்சரவையில் 22 பெருந்தலைகள்: நாளை பதவி ஏற்பு விழா
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா அமைச்சரவில் 22 புதிய அமைச்சர்கள் நாளை பதவி ஏற்கின்றனர்.
கர்நாடக முதல்வராக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கடந்த 15ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அன்று அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதையடுத்து அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பாக சித்தராமையா டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் இறுதியில் 22 பேர் அமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை நேற்று மாலையுடன் முடிந்து இன்று அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஆலோசனைக் கூட்டம் திட்டமிட்டபடி முடியாததால் அமைச்சர்கள் 22 பேரும் பெங்களூர் ராஜ் பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் நாளை பதவியேற்கின்றனர்.
முன்னதாக ஆலோசனையின்போது முதல்கட்டமாக பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியலில் புதியவர்களை சேர்க்க சித்தராமையா விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அனுபவம் வாய்ந்தவர்களை மட்டுமே முதல் பட்டியலில் எடுக்க வேண்டும் என்று கட்சி தலைமை தெரிவித்தது அவருக்கு சங்கடமாகப் போய்விட்டதாம்.
நாளை பதவியேற்கவிருக்கும் அமைச்சர்களில் சிலர் விவரம் வருமாறு,
ஹெச்.கே. பாட்டில், ஆர்.வி. தேஷ்பாண்டே, ஷாமனூர் சிவசங்கரப்பா, டிபி ஜெயச்சந்திரா, நடிகர் அம்பரீஷ், வீரண்ண மத்திகட்டி, பி. ராமநாத் ராய், ராமலிங்க ரெட்டி, கே.ஆர். ரமேஷ் குமார், ஆர். ரோஷன் பேக், கேஜே ஜார்ஜ், காகோடு திம்மப்பா, மலாகாரெட்டி, பசவராஜ் ராயரெட்டி, சி மொட்டம்மா, வி, சீனிவாச பிரசாத், ஹெச்.சி. மகாதேவப்பா, ஹெச்.எஸ். மகாதேவ் பிரசாத், வினய் குமார் சொராகே, பிரகாஷ் ஹுக்கேரி, நடிகை உமாஸ்ரீ மற்றும் குவாமர் உல் இஸ்லாம்.
டி.கே. சிவாகுமாரை அமைச்சரவையில் சேர்க்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து சிவக்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாம். அவரும் நாளை பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications