ஆச்சரியம்... 49 சாவடிகளில் 100 சதவீதத்தை தாண்டிய ஓட்டுப்பதிவு: பாகிஸ்தான் தேர்தலில் காமெடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தலில் 49 சாவடிகளில் 100க்கும் அதிகமான சதவீதத்தில் வாக்காளர்களை விட வாக்கு வாக்கு பதிவு இருந்ததைக் கண்டு தேர்தல் ஆணையர்களுக்கு மயக்கமே வந்து விட்டதாம்.
பல்வேறு மிரட்டல்களுக்கிடையே, கடந்த 11ம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பிரதமராக 3வது முறை நவாஸ் பதவியேற்க உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 8,119 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 49 சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, அதிகமாக வாக்குப் பதிவு நடந்துள்ளதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்தலின் போது கள்ள ஓட்டு போடப்பட்டது, பல வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அதிக வாக்குகள் பதிவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பஞ்சாபில் 32 வாக்குச் சாவடிகள், சிந்துவில் 10, கைபர் பக்துன்கவா நகரில் 6 மற்றும் பலுசிஸ்தானில் ஒரு வாக்குச் சாவடிகளில் அளவுக்கதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒராங்கி, மாடல் காலனி, மலீர் காலனி, ஷா பைசல் காலனி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில்தான் இதுபோல் முறைகேடு நடந்துள்ளது.
ஒரங்கி நகரில் ஒரு வாக்குச் சாவடியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1,349. ஆனால், பதிவான வாக்குகள் 2,508. இதே நகரில் மற்றொரு வாக்குச் சாவடியில் வாக்காளர் எண்ணிக்கை 1,230. ஆனால், பதிவான வாக்குகள் 1,4,84. இப்படி 49 சாவடிகளில் அளவுக்கதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கள்ள ஓட்டு போடுபவர்கள் கவனத்திற்கு... ‘கொஞ்சம் கணக்கு பார்த்து ஓட்டு போடுங்கப்பா...! ‘












Click it and Unblock the Notifications