உ.பி யில் கொடூரம்: ஊசி மூலம் ஆசிட், பெட்ரோல் செலுத்தி கைதி கொலை
ஈட்டா: உ.த்திரப்பிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவர் போலீசாரால், ஆசிட் மற்றும் பெட்ரோலினை ஊசி வாயிலாக செலுத்தப்பட்டு கடும் சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஈட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர், பானிகான் ஆகியோர் , கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றனர். இவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக முதலில் புகார் எழுந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று பல்பீரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து லக்னோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பல்பீர் இறந்தார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ஊசி வாயிலாக ஆசிட், பெட்ரோல் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குற்றத்தை ஏற்கச்சொல்லி போலீசார் பல்பீரை வற்புறுத்தியதாகவும், அதனாலேயே சூடான தட்டில் அமர வைப்பது மற்றும் இது போன்ற கொடுமைகளை புரிந்துள்ளதாகவும் அவரின் குடும்பத்தினர் போலீசார் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications