ஐயா, எங்க குழந்தையை கொன்னுடுங்க: குமரி மாவட்ட கலெக்டரிடம் கதறிய தாய், தந்தை
குமரி: பெற்ற குழந்தையை கருணைக் கொலை செய்யக் கோரி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் தாயும், தந்தையும் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ளது வண்டாவிளை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் டென்னிஸ் குமார்(33). கூலித் தொழிலாளி. அவருக்கும் மேரி சுஜா(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. இதனால் மேரி கர்ப்பம் ஆனார்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அவர் பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் 7ம் தேதி வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அன்று இரவே அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அதே மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு சுவாசத்தை தவிர வேறு எந்த உடல் அசைவும் இல்லை. தாய்ப்பால் மற்றும் வைட்டமின்கள் கொடுத்தால் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் பின் தலையில் ஏற்பட்டிருந்த பாதிப்பை பிறந்ததும் கவனிக்க தவறியதால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தை பிறந்து 11 மாதமாகிவிட்டது. குழந்தையின் சிகிச்சைக்காக பல லட்ச ரூபாயை டென்னிஸ் குமார் செலவு செய்துள்ளார். ஆனாலும் குழந்தை குணமாகியபாடில்லை.
இந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் டென்னிஸ் குமார் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் சாதாரண கூலித் தொழிலாளி. எனது குழந்தைக்கு பிறந்தது முதல் உடல் நிலை சரியில்லை. இதற்கு என்னால் முடிந்த வரை மருத்துவம் பார்த்தேன். ஆனாலும், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. எனவே, எனது குழந்தையின் எதிர்காலம் கருதி மருத்தவ செலவை அரசு ஏற்க வேண்டும்.
மேலும், எனது குழந்தையின் இந்த நிலைக்கு காரணமான டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகிச்சையில் குணமாக்க முடியாத பட்சத்தில் குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லை எனில் நான் எனது எனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications