குடும்பத் தகராறு.... 3 குழந்தைகளை கிணற்றில் வீசி தற்கொலைக்கு முயன்ற தாய் கைது
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே குடும்பத்தகராறில் மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜரினா (வயது 35). இவர்களுக்கு ஜகருல்லா (5) என்ற மகனும், கிஸ்மத் (2 1/2), யாஷ்மின் (1 1/2) என்ற 2 மகள்களும் இருந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு இஸ்மாயில் இறந்து விட்டார். அதன்பிறகு ஜரினா, தனது மகன், மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இதனிடையே உத்திரமேரூரை அடுத்த குப்பையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பானிபூரி வியாபாரி அருள் (38) என்பவருடன் ஜரீனாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. அருள் ஏற்கனவே கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
எனவே கணவனை இழந்து கைக்குழந்தைகளுடன் தவிக்கும் ஜரினா மற்றும் அவரது குழந்தைகளை அருள் குப்பையநல்லூர் கிராமத்துக்கு அழைத்து வந்து கணவன்-மனைவி போல் குடித்தனம் நடத்தினார். இந்த நிலையில் நேற்று காலை அருளுக்கும், ஜரினாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே ஜரினா, தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மதியம் 3 மணியளவில் 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பம்புசெட்டு கிணற்றுக்கு சென்று மூன்று குழந்தைகளையும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் தள்ளினார்.
அதன்பிறகு தானும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து, ஜரினாவை உயிருடன் மீட்டனர். ஆனால் அவரது 3 குழந்தைகளும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டன. சம்பவ இடத்திற்கு வந்த உத்திரமேரூர் போலீசார், கிணற்றில் மிதந்த 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து ஜரினா, எதற்காக தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றார்? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.தலைமறைவான அருளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications