இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்தது காங்கிரஸ் தான்: திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை: இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து தமிழகத்தில் பொது அமைதியை குலைக்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:
இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரசின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் திட்டமிட்டு பிரசாரம் செய்கிறார்கள். இலங்கையில் போர் குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதேசமயம் அதனை காரணமாக வைத்து கொண்டு தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை போரில் எஞ்சிய தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைபாடு. அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு இலங்கைக்கு நிதி உதவி அளித்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களை விட இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்தது காங்கிரஸ் தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக யார் பிரசாரம் மேற்கொண்டாலும் அதனை உரிய முறையில் கட்சி எதிர் கொள்ளும்.
மீண்டும் காங்கிரஸ் ஆட்சி
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. 2 ஆண்டு கால ஆட்சியில் பல நிறைகளும், சில குறைகளும் உள்ளன. பாஜக கூட்டணியில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை அதன் கூட்டணி கட்சிகளே ஒத்துக்கொள்ளவில்லை. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகுதான் கூட்டணிகள் முடிவாகும். ஊழல் குற்றசாற்றுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட போவதில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவது உறுதி. பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications