முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்- குரு மீது வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
அரியலூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் சண்முகம் அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்திராபதியிடம் புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 7.2.2013 அன்று இரவு அரியலூரில் உள்ள காமராஜ் திடலில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க . நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசினார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்காக நீதிபதி உத்திராபதி ஏற்றுக்கொண்டார்.
இதேபோன்று வழக்கறிஞர் சண்முகம் மற்றொரு மனுவை நீதிபதி உத்திராபதியிடம் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழ குடியிருப்பு பகுதியில் கடந்த 7.2.13 அன்று வன்னியர் சங்க பட்டதாரி இளைஞர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வன்னியர் சங்க மாநில தலைவரான காடுவெட்டி குரு தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அதே நாளில் அரியலூரில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்கூட்டத்திலும் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கலந்து கொண்டு முதல்வரை அவதூறாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார். காடுவெட்டி குரு மீதான 2 மனுக்களையும் விசாரணைக்கு நீதிபதி உத்திராபதி இன்று ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications