பெங்களூர் குண்டு வெடிப்பு: கிச்சன் புகாரி கூட்டாளிகள் நெல்லையில் பதுங்கல்?
நெல்லை: பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய கிச்சான் புகாரியின் கூட்டாளிகள் நெல்லையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கர்நாடக போலீசார் நெல்லையில் முகாமிட்டுள்ளனர்.
பெங்களூரு மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே கடந்த 17ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விசாரணையில் குண்டு வெடிப்புக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய பைக் தமிழகத்தை சேர்ந்தது என தெரிய வந்தது. இதையடுத்து தமிழக, கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்டமாக பைக்கை வாங்கிய பெருங்களத்தூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் விசாரணை நடந்தது. அவர் பைக்கை காஞ்சிபுரத்தை சேர்ந்த மெக்கானிக் முருகனிடம் விற்றதாக தெரிவித்தார்.
முருகனிடம் விசாரித்த போது வேறொரு மெக்கானிக் அன்வர் பாஷாவிடம் விற்றது தெரிய வந்தது. அவரிடம் தீவிரவாதிகள் போலி ஆவணங்கள் கொடுத்து பைக்கை வாங்கி சென்று அதில் வெடிகுண்டை பொருத்தி நாசவேலைக்கு பயன்படுத்தியுள்ளனர்.
குண்டு வெடிப்பில் கேரள தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வரவே எஸ்பி அருளரசு தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று 4 பேரை கைது செய்தனர். பைப் வெடிகுண்டை இவர்கள் தான் தயாரித்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நெல்லையை சேர்ந்த கிச்சான் புகாரி, முகமது ஷாலி, பீர் முகமது, பஷீர் மற்றும் ரசூல் மைதீன், சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிச்சான் புகாரியின் கூட்டாளிகள் நெல்லையில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. குண்டு வெடிப்பில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் பெங்களுரு போலீசார் நெல்லையில் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக போலீஸ் பக்ரூதின் என்பவர் இங்கு பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை பிடிக்க தமிழக, கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications