குருநாத் கோரிய கால அவகாசம் நிராகரிப்பு- இன்று ஆஜர் இல்லை எனில் அரெஸ்ட் வாரண்ட்தான்!

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் போலீசாரின் தேடுதல் வேட்டை நாட்டின் பல நகரங்களிலும் விரிவடைந்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் நேற்று பல தரகர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் தேடப்பட்ட கிட்டி என்பவர் போலீசிடம் சரணடைந்திருக்கிறார். இந்நிலையில் பிக்ஸிங் விவகாரத்தில் ஐபிஎல் அணிகளில் முக்கிய அணியான சென்னை சூப்பார் கிங்ஸ் அணியே சிக்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் வின்து தாராசிங்குடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் என்ற தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் 4 பேர் நேற்று சென்னை வந்தனர். சென்னை செனடாப் சாலையில் உள்ள குருநாத் வீட்டுக்குப் போய் விசாரணை நடத்தினர். ஆனால் குருநாத் வீட்டில் இல்லை. இதனால் அவர் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று அவரது உதவியாளரிடம் சம்மன் கொடுத்துவிட்டு சென்னையிலே அவர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் தாம் ஆஜராவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று மும்பை போலீசாரிடம் குருநாத் மெய்யப்பன் கோரியிருந்தார்.
குருநாத்தின் இந்த கோரிக்கையை நிராகரித்த மும்பை போலீசார் இன்று ஆஜராக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளனர். குருநாத் தற்போது எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை. அவரது மாமனார் சீனிவாசன் தற்போது கொடைக்கானலில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவருடன் குருநாத் இருக்கக் கூடும் என்று சில தகவல்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இன்று குருநாத் ஆஜராகவில்லை எனில் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications