காவிரி நீரை திறக்காத கொடுக்காத அரசு ரூ2480 கோடி நட்ட ஈடு வழங்கக் கோரி தமிழகம் வழக்கு!

கடந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகளில் தண்ணீர் அதிக அளவில் இருப்பு இருந்தது. ஆனால் பெரும் போராட்டம் நடத்திப் பார்த்தும் கர்நாடகா தண்ணீரை திறந்துவிடவில்லை. இதனால் தமிழக டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது கர்நாடக அரசு மீது வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதன்படி இப்போது தமிழக அரசு கர்நாடகா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மே 9-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவிரி தீர்ப்பாயம் உத்தரவின்படி 2012-13 ஆண்டில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மின் உற்பத்தி மற்றும் விவசாய சார்பு பொருட்கள் உற்பத்தி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இழப்பீடாக ரூ. 1045 கோடியே 70 லட்சம் கர்நாடகா தர உத்தரவிடவேண்டும். மேலும் தீர்ப்பாயம் 2012-13-ம் ஆண்டில் 58.18 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும் அதை வழங்காததால் அதற்கு ரூ. 1434 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மொத்தம் ரூ. 2480 கோடி கர்நாடக அரசு நட்ட ஈடு தரவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காவிரியில் போதிய தண்ணீர் விடாததால் உணவு உற்பத்தியில் ரூ. 685 கோடியே 80 லட்சமும், மின் உற்பத்தியில் ரூ. 268 கோடியே 50 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கணக்கிட்டுள்ளது. காவிரி பாசனம் மூலம் 14 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெறும். போதிய தண்ணீர் இல்லாததால் 3 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நிறுத்தப்பட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications