சென்னையில் கார் மோதி சிறுவன் பலி: விவிஐபி மகனைக் காப்பாற்ற முயன்ற இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை எழும்பூரில் தாறுமாறாக ஓடிய கார் ஏறியதில் நடைபாதையில் தூங்கிய சிறுவன் பரிதாபமாக பலியானான். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் மகனான ஷாஜிஸை போலீஸார் தேடி வருகின்றனர். தவறான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தவற விட்டதற்காக சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
எழும்பூர் பாந்தியன் சாலையில் கடந்த 22ம் தேதி நள்ளிரவில் கோஆப்டெக்ஸ் சர்வீஸ் சாலையில் இருந்து வந்த பென்ஸ் கார் ஒன்று எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. பயணிகள் நிழற்குடை அருகே தூங்கிக் கொண்டிருந்த சுபரக்ஷிதா, முனிராஜ், ராஜா மொய்தீன், மணி ஆகியோர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சிறுவன் முனிராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அண்ணா சதுக்கம் போலீசார் முதலில் டிரைவர் குமார் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காரில் பயணம் செய்த மற்றவர்களை விடுவித்தனர். அவர்களில் எம்.பி. டிஸ்லரீஸ் என்ற மதுபான ஆலை உரிமையாளர் புருஷோத்தமன் மகன் சாஜிஸும் ஒருவர்..
பின்னர், சாஜிஸ் தான் காரை ஓட்டியதாகவும், அவரை காப்பாற்றவே, குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு தகவல் கிடைத்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.
தற்போது, பணியில் கவனக்குறைவாக இருந்தது, விபத்து ஏற்படுத்திய நபருக்கு பதிலாக வேறு நபர் மீது வழக்கு பதிவு செய்தது, ஒரு சார்பாக நடந்து கொண்டது போன்ற காரணங்களுக்காக இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் காரில் பயணித்த மேலும் மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்து வழக்கும் தற்போது அஜாக்கிரதையால் விபத்து ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷாஜிஸ் கேரளாவைச் சேர்ந்த ஆளும் கட்சியின் பிரபல அரசியல்வாதியின் உறவினர் எனவும், அதனாலேயே முதலில் வழக்கு திசை திருப்ப முயற்சிகள் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications