நிலப் பிரச்சனை: சார் பதிவாளர் அலுவலகத்தில் கத்தியால் குத்திக்கிழித்துக் கொண்ட அண்ணன், தங்கை
நாமக்கல்: நிலப் பிரச்சனை தொடர்பாக ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அண்ணனும், தங்கையும் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக் கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் முத்துகாளிப்பட்டி கிராமம் அணைப்பாளையத்தார் தோட்டத்தைச் சேர்ந்த துரைசாமியின் மகன் ரவிச்சந்திரன்(42), மகள் சித்ரா(38).
நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் துரைசாமிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். இந்த நிலத்தை பங்கு பிரிப்பதில் துரைசாமிக்கும், சித்ராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சித்ரா தனது பங்கை வேறு ஒருவரின் பெயரில் கிரயம் செய்ய தீர்மானித்து நேற்று ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த அலுவலகத்திற்கு வந்த அவரின் சகோதரர் ரவிச்சந்திரன் நிலத்தை வேறு ஒருவரின் பெயரில் கிரயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அண்ணன் தங்கை இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அண்ணனும், தங்கையும் கத்தியால் ஒருவரையொருவர் குத்திக் கொண்டனர்.
இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும், சித்ரா தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications