கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு டாஸ்மாக் கடை திறந்த தமிழக அரசு
கரூர்: கரூர் மாரியம்மன் திருவிழாவுக்கு தற்காலிக டாஸ்மாக் கடை திறந்து வைத்து பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் புகழ் பெற்ற திருவிழாக்களில் கரூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவின் போது, பொது மக்களை மகிழ்ச்சி படுத்த தனியார் சார்பில் சிறு அளவில் தற்காலிக பொழுதுபோக்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழக அரசு தற்காலிக டாஸ்மாக் கடையை திறந்து வைத்து குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
கோவிலுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளே இருக்கக் கூடாது என்பது தமிழக அரசின் உத்தரவு. ஆனால் கோவில் திருவிழாவில் டாஸ்மாக் கடையை திறந்து வைத்து திடீர் புரட்சி செய்துள்ளது தமிழக அரசு.
கரூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மொத்தம் 120 டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகின்றது. மது விற்பனையை அரசே ஏற்று நடத்த துவங்கியது முதல் மது விற்பனை அதிகரித்து வருவதால் இதில் தமிழக அரசு அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.
தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற பிரசித்தி கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. இந்த திருவிழா வரும் ஜூன் 9ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த நிலையில் மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு பசுபதிபாளையம் பாலம் அருகில் தற்காலிக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
கம்பம் விழாவையொட்டி உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் சுமார் பல லட்சம் பேர் வந்து கலந்து கொள்வார்கள்.
இந்த சூழ்நிலையில் தற்காலிக டாஸ்மாக் கடைகள் அமைப்பதால் மது குடித்துவிட்டு ஆட்டம் போடும் குடிகாரர்களால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், பெண்கள் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும் என்றும் பலரும் அச்சப்படுகின்றனர்.
தமிழக அரசின் இந்த செயலுக்கு ஆம் ஆத்மி கட்சி தேசிய செயலாளரும், தமிழக ஒருங்கிணைப்பாளருமான கிறிஸ்டினா சாமி மற்றும் தமிழக மருத்துவர் பேரவை மாநில தலைவர் காளிமுத்து ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.