பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூவர் அசாம் ராஜ்யசபா தேர்தலில் போட்டி- இன்று வாக்குப் பதிவு
குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் 2 ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்தலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் உட்பட மூவர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தலில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
அசாம் மாநிலத்தில் இருந்து 5 முறை ராஜ்யசபா எம்.பி.யாக பிரதமர் மன்மோகன்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது தற்போதைய பதவிக் காலம் முடிவடைவதால் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 15-ந் தேதி அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் வயது 82 எனக் குறிப்பிட்டதால் சர்ச்சை வெடித்தது. பின்னர் வயது 80 என திருத்தம் மேற்கொள்ளப்பட்டு புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மற்றொரு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் மேலிடம் சார்பில் சந்தி யூஸ் குஜூர் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஆனால் இதை காங்கிரஸ் கட்சியில் ஒருதரப்பினர் ஏற்கவில்லை. இதேபோல் மத்தியில் காங்கிரஸ் அரசில் இடம்பெற்றுள்ள அகில இந்திய ஜனநாயக முன்னணியும் குஜூரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டி வேட்பாளரை அறிவித்தது. இதனால் 2 எம்.பிக்கள் தேர்தலுக்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டது.
அசாம் மாநில சட்டசபையில் மொத்தம் உள்ள 126 எம்.எல்.ஏக்களில் 78 பேர் காங்கிரஸ் கட்சியினர். இதனால் மன்மோகன்சிங் வெற்றி பெறுவது உறுதி. இருப்பினும் மற்றொரு எம்.பி.யாக காங்கிரஸ் மேலிட வேட்பாளர் வெற்றி பெறுவாரா? அல்லது அவரை எதிர்த்து போட்டி வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருப்பவர் வெல்லுவாரா? என்ற குழப்பமான நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி கொறாடா உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கொறாடா உத்தரவை மதித்து எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்களா? என்பது சந்தேகமே...
இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. இத்தேர்தலை 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜகவும் அசாம் கன பரிசத் அமைப்பும் புறக்கணித்துள்ளது. மாலை 4 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications