90% கேன் குடிநீர் குடிக்க லாயக்கில்லாதது: இந்திய நுகர்வோர் சங்க தலைவர் எச்சரிக்கை

இந்திய நுகர்வோர் சங்கத்தின் சார்பில் பாதுகாப்பான குடிநீர் குறித்த பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சங்க தலைவர் ஆர். தேசிகன் பேசியதாவது,
இந்தியாவில் நுகர்வோர் தொடர்பான சட்டங்கள் இருந்தும் அவை முறையாக அமல்படுத்தப்படாமல் உள்ளது. சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்த கடமையில் இருந்து அரசு தவறினால் நாம் வழக்கு போடலாம். எந்த குடிநீரையும் நன்கு காய்ச்சி, ஆற வைத்த பிறகே பருக வேண்டும்.
சிறிய பாட்டில்களில் குடிநீர் வாங்கினால் நீரை குடித்துவிட்டு பாட்டிலை நொறுக்கி எறிந்துவிட வேண்டும். அதை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு கேடு. கேன் குடிநீர் பயன்படுத்துவதை நாம் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் 10 கேன் குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் 9 மாதிரிகள் குடிக்க உகந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 1122 குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 44 சதவீத மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக டிடிஎஸ்(Total Dissolved Solids) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆகியவற்றில் கிடைக்கும் குடிநீரில் டிடிஎஸ் அனுமதிக்கப்பட்ட அளவே இருந்தாலும் அவற்றில் பாக்டீரியாக்களின் தாக்கம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மாதிரிகளை பரிசோதனை செய்தவர்கள் மற்றும் பயிற்சியில் கலந்து கொண்ட 782 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications