அசாமில் இருந்து 5வது முறையாக ராஜ்யசபா எம்.பி.யானார் பிரதமர் மன்மோகன்சிங்!

பிரதமர் மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி. ஆக தேர்ந்து எடுக்கப்பட்டவர். இவரையும் சேர்த்து அந்த மாநிலத்தில் 2 எம்.பி.க்களின் பதவி காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து 2 எம்.பி.க்களை தேர்ந்து நேற்று தேர்தல் நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. அவர்களில் ஒரு வேட்பாளராக பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் நிறுத்தப்பட்டார். இன்னொரு காங்கிரஸ் வேட்பாளராக சந்தியூஸ் குஜுர் நிறுத்தப்பட்டார். எதிர்க் கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, தங்கள் கூட்டணி சார்பில் அமினுல் இஸ்லாம் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. இதனால் 2 எம்.பி.க்களுக்கான தேர்தலில் அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டது.
திரிணாமுல் ஆதரவு
காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முதல்வர் தருண் கோகாய் முதலாவதாக வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் கட்சியின் 79 எம்.எல்.ஏ.க்களும், அதன் கூட்டணி கட்சியான போடோலேண்ட் மக்கள் முன்னணியின் 12 எம்.எல்.ஏ.க்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வும், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
புறக்கணிப்பு
எதிர்க் கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் அதன் வேட்பாளர் அமினுல் இஸ்லாமுக்கு வாக்களித்துள்ளனர். அசாம் கணபரிசத் எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும், பாரதிய ஜனதா கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களும் இந்த தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, வாக்குப் பதிவு முடிந்த சிறிது நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர்களான பிரதமர் மன்மோகன்சிங், சந்தியூஸ் குஜுர் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து 5வது முறையாக அசாமில் இருந்து எம்.பி.யாக பிரதமர் மன்மோகன்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications