சொல்லச் சொல்லக் கேட்காமல் கள்ளத்தனம்... மனைவியின் கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கணவர்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மனைவியின் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து அவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்துக் கொலை செய்தார் கணவர்.
அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான முருகன். இவரது மனைவி பெயர் பாஞ்சாலி. 35 வயதான இவருக்கும், தர்மபுரி மாவட்டம் ஆலங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 36 வயது கண்ணாயிரத்திற்கும் இடையே கள்ளக்காதல் மூண்டது.
முருகனுக்கு மேல் செங்கம் அருகே உள்ள அயோத்திப்பட்டணத்தில் ஒருதோட்டம் உள்ளது. பக்கத்திலேயே கண்ணாயிரத்தின் தோட்டமும் உள்ளது. இதனால் இரு தரப்பும் நட்புடன் இருந்துள்ளனர்.
கண்ணாயிரத்தின் மனைவி இறந்து விட்டார். 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார் கண்ணாயிரம். இந்த நிலையில் முருகனின் மனைவிக்கும், கண்ணாயிரத்திற்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கள்ளக்காதலில் இறங்கினர்.
கடந்த நான்கு வருடங்களாக முருகன் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுமுருகனுக்குத் தெரிய வந்து அதிர்ந்தார். பின்னர் மனைவியைக் கண்டித்தார். ஆனால் பாஞ்சாலி கண்டுகொள்ளவில்லை.
இதனால் கொதிப்படைந்தார் முருகன். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் கண்ணாயிரத்திற்குப் போன் செய்து, வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி கண்ணாயிரமும் வந்தார். வந்த கண்ணாயிரத்தை முருகன் சரமாரியாக உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கி விட்டார். இதில் கண்ணாயிரம் உடனடியாக உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பாஞ்சாலி. இருப்பினும் கள்ளக்காதலன் செத்துப் போய் விட்டதால் கணவருடன் இணைந்து அவரும், முருகனும் சேர்ந்து கண்ணாயிரத்தின் உடலை ஒரு கிணற்றில் வீசி விட்டுத் திரும்பினர்.
ஆனால் கண்ணாயிரம் கானாமல் போனது தொடர்பாக புகார் வந்ததால் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முருகனைக் கூப்பிட்டு விசாரித்ததில், உண்மையை ஒப்புக் கொண்டார் முருகன். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். பாஞ்சாலி தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications