12 வயதில் தொடங்கி 90 வயதிலும் பத்திரிகையாளராக தொடரும் கருணாநிதி
சென்னை: தமது 12 வயதில் ஒரு பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி 90 வயதிலும் அரசியல் சூறாவளிகளுக்கு மத்தியில் பத்திரிகையாளராகவே வாழ்ந்து வருபவர் திமுக தலைவர் கருணாநிதியாக மட்டுமே இருக்க முடியும்...
திமுக தலைவர் கருணாநிதி இன்று 90வயதை எட்டுகிறார். அவர் தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்திதான்.. அவர் இல்லாமல் தமிழக அரசியல் இல்லை..அவர் இல்லாமல் தமிழகத்தின் அரை நூற்றாண்டு சரித்திரமும் இல்லை... பழுத்த அரசியல்வாதியாக, மூத்த இலக்கியவாதியாக மட்டுமின்றி முதுபெரும் பத்திரிகையாளராகவும் திகழ்கிறவர் கருணாநிதி.

12 வயதில் மாணவ நேசன்
தமது 12வது வயதில் மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினார் கருணாநிதி. 12 வயதில் கையெழுத்து பத்திரிகை நடத்திய கருணாநிதி அதிலே கார்ட்டூன்களையும் வரைந்து வெளியிட்டார்...அதில் குறிப்பிடும்படியானது இங்கிலாந்து இளவரசர் தன காதலிக்காக அரச பட்டத்தையே துறப்பது பற்றிய கருத்துப்படம்.இளவரசன் ஒருவர் பட்டம் விடுகிறார். அந்த பட்டத்தின் நூல் அறுந்து பட்டம் தனியே பறக்கிறது. இதைத் திகைத்துப்பார்க்கும் இளவரசனை பட்டத்தை இழந்த இளவரசன் என்று வர்ணிக்கும் கருத்துப்படம் முன்பக்கத்தில் போட்டு மாணவ நேசன் வெளியானது. அந்தப் படத்தை வரைந்ததும் கருணாநிதியே..

18 வயதில் முரசொலி
2-வது உலகப் போரின் போது துண்டறிக்கையாக 1939-45ஆம் ஆண்டு காலத்தில் வெளியானது முரசொலி. முரசொலி முதன் முதலில் வெளியானது 10.8.1942-ல்...அப்போது கருணாநிதிக்கு வயது 18. முரசொலியை தாம் பெற்ற முதல் குழந்தை என்பார் கருணாநிதி. போர்க்காலத்தில் தாள் கிடைக்காமல் போனதால் பெரும் போராட்டத்துக்கு இடையே இந்த இதழை வெளியிட்டார். பள்ளித் தேர்வுகள் நெருங்கிய நிலையில் சேரன் என்ற புனைபெயரில் கருணாநிதி கட்டுரைகளை அதில் எழுதி இருந்தார். இதில் வேடிக்கை என்னவெனில் இத்துண்டறிக்கையை காங்கிரஸ் கட்சியினரின் அச்சகத்தில்தான் அச்சடித்தனர். முரசொலியில் கருணாநிதியின் பத்திரிகை திறனாற்றலை விவரிப்பது என்பது ஒரு முனைவர் பட்ட ஆய்வைவிட பெரியது. குறிப்பாக தலைப்புகளில் அவர் செலுத்துகிற கவனம் படிப்போர் மனதில் 'ந்ச்'சென நிற்கும். ராஜாஜி, சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் கல்கியில் ராமாயணத் தொடர் எழுதினார். அதற்கு பதிலடியாக மூக்காஜி என்ற பெயரில் சக்கவரத்தியின் திருமகன் என்ற பெயரில் போட்டிக் கட்டுரை வெளியிட்டார்.

கடிதங்கள்..
திமுக தொண்டர்களுக்கு எழுதும் உடன்பிறப்பே கடிதம் மிகப் பெரிய சரித்திரம்...திமுக தொண்டர்களுக்கு அறிவுரை விடுப்பதும் அறைகூவல் விடுப்பதும் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனக் கணைகள் தொடுப்பதும் என எல்லாமும் அடங்கி இருக்கும் இந்த உடன்பிறப்புக்கான கடிதம்தான் ஒவ்வொரு திமுக தொண்டனுக்குமான உயிர் மூச்சு.

விளக்கெண்ணெய், வெண்டைக்காய்...
கருணாநிதி நடத்திய முரசொலி பத்திரிகைதான் எத்தனையோ திராவிடர் இயக்க எழுத்தாளர்களை இந்த தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியது. நாஞ்சிலார், தென்னரசு, ஏ.கே.வில்வம், அடியார் என பெரும் பட்டியல் நீளும்...சுரதாவின் கவிதைகளை அதிகம் பிரசுரித்ததும் முரசொலியே. எமர்ஜென்சி காலத்தில் இந்திராவுக்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்த ஏடு கருணாநிதியின் முரசொலிதான். அப்போது கருணாநிதி வெளியிட்ட கார்ட்டூனை நியூஸ் வீக் பத்திரிகை வெளியிட்டதால் முரசொலி உலகப் புகழ் பெறலாயிற்று. இதனால் அதன்ஆசிரியராக இருந்த முரசொலி மாறன் நெருக்கடி காலத்தில் சிறைக்குப் போனார். அப்போது கருத்துகளை நேரடியாக எழுத முடியாத நெருக்கடி இருந்ததால் வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும், ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும் என்ற தலைப்பை பெரிதாகப் போட்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

புதையல்
நாட்டை போபர்சு பீரங்கி பேர ஊழல் உலுக்கி வந்த காலத்தில் முரசொலியில் ஞாயிறு இணைப்பாக 'புதையல்' வெளிவந்தது. இன்று போல் இணையதளமும் சமூக வலைதளமும் இல்லாத அந்தக் காலத்தில் அந்த புதையலை புதையலாகவே நினைத்து பாதுகாத்து வைத்த பத்திரிகையாளர்கள் பலரும் உண்டு. அப்படி பத்திரிகையாளர்களுக்கும் வழிகாட்டும் பத்திரிகையாளராக திகழ்ந்தவர் கருணாநிதி.

கேள்வி- பதில் அறிக்கை வடிவம்
கடந்த சில ஆண்டுகளாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற முடியாமல் போனாலும் தாமே கேள்வி எழுதி தாமே பதிலும் எழுதி "கேள்வி- பதில்" வடிவிலான ஒரு அறிக்கை வடிவத்தை உருவாக்கியிருக்கிறார் கருணாநிதி.. வயது அதிகரித்தாலும் இன்றளவும் உடன்பிறப்புக்கே கடிதம் எழுதுவதும் ஒரு அரசியல் தலைவராக அறிக்கைகள் தயாரித்து வெளியிடுவதையும் தொடர்கிறார் கருணாநிதி.

முத்தாரம், ரைசிங் சன்
கருணாநிதி முத்தாரம் வார இதழையும் தொடங்கினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவுக்காக தி ரைசிங் என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார் கருணாநிதி.

90 வயதில் தொடரும் பத்திரிகை துறை
90 வயதிலும் தமது பத்திரிகை துறை பணியை கருணாநிதி நிறுத்திவிடவில்லை. உலகில் 90 வயது கடந்த பத்திரிகையாளர்கள் இருக்கலாம்.. ஆனால் 12 வயதில் பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கி 90 வயதைக் கடந்தும் பத்திரிகையாளராக நீடிப்பது அனேகம் திமுக தலைவர் கருணாநிதியாக மட்டுமே இருக்க முடியும் என்பது திமுகவினரின் பெருமிதம்...












Click it and Unblock the Notifications