சூதாட்ட புகார்: குருநாத் மெய்யப்பன், விண்டூ தாரசிங்கிற்கு நிபந்தனை ஜாமீன்
ஐ.பி.எல் 6 கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட் நடிகர் விண்டூ தாராசிங் பெட்டிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. விண்டூவைவை கைது செய்த போலீசார், விண்டூ மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஐ.பி.எல். பெட்டிங்கில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து அவரை மும்பை போலீசார் கடந்த 23-ந்தேதி கைது செய்தனர்.
குருநாத் மெய்யப்பனின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆர்தர் ரோட்டில் உள்ள சிறைக்கு அவரை போலீசார் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் குருநாத் மெய்யப்பன், விண்டூ ஆகியோர் மும்பை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டூ ஆகியோர் 25 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி ஜாமீனில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார். வாரம் இருமுறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.