ஒரு அவியலுக்காக கட்டி உருண்ட மாயாண்டி உறவினர்கள்.. 3 பேருக்கு நல்ல அடி!
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே திருமண வீட்டில் அவியல் கூடுதலாக வைக்காததற்காக சண்டை மூண்டு விட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வாகைக்குளம் என்ற இடத்தில் மாயாண்டி என்பவர் இல்ல திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் சாப்பாட்டுப் பந்தி தொடங்கியது. அங்குதான் பிரச்சினையாகி விட்டது.
திருமணத்திற்கு வந்திருந்த வானமாமலை என்பவர் நன்றாக குடித்து விட்டு சாப்பிட வந்தார். இசக்கிமுத்து என்பவர் வரிசையாக அவியல் வைத்துக் கொண்டு வந்தார். வானமாமலைக்கும் வைத்தார். ஆனால் இன்னும் கொஞ்சம் என்றார் மலை.. இசக்கியும் மீண்டும் கொஞ்சம் வைத்தார். ஆனால் விடாத மலை... இன்னும் வை என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.. அடுத்து என்னஅடிதடிதானே!.. இருவரும் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
இருவருக்கும் இடையிலான சண்டை பின்னர் கோஷ்டி மோதலாக மாறி இரு தரப்பு ஆதரவாளர்களும் சரமாரியாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதில் இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேருக்கு நல்ல அடி விழுந்து காயமடைந்தனர்.
அதன் பின்னர் இரு தரப்பும் போலீஸில் புகார் கொடுக்க, போலீஸார் ஆளுக்கு தலா 3 பேர் என்ற விகிதத்தில் 6 பேரைக் கைது செய்து வழக்குப் போட்டுள்ளனர்.
கல்யாணத்துக்குப் போனா சாப்பிட மட்டும் செய்யுங்கப்பா.. சண்டையெல்லாம் எதுக்கு....!