சாக்ஷி டோணி பக்கத்தில் உட்கார்ந்தது என் வாழ்நாளின் பெரிய தவறு: வின்து
டெல்லி: ஐபிஎல் போட்டிகளின்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி மனைவி சாக்ஷி அருகில் அமர்ந்து விளையாட்டைப் பார்த்தது தான் தனது வாழ்வில் செய்த பெரிய தவறு என்று வின்து தாரா சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஸ்பாட் பிக்ஸிங் குறித்து நான் எந்த கிரிக்கெட் வீரருடனும் இதுவரை பேசியதே இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பன் எனக்கு நண்பர் மட்டுமே. அவருக்கும் ஸ்பாட் பிக்ஸிங்கிற்கும் தொடர்பில்லை. இந்திய அணியின் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி அருகில் அமர்ந்தது என் வாழ்வில் நான் செய்த பெரிய தவறு ஆகும். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவூபும் எனது நண்பர். அவருக்கு ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்பில்லை. மேலும் கைது செய்யப்பட்ட சஞ்சய் ஜெய்பூர் மற்றும் பவன் ஜெய்பூர் தரகர்கள் இல்லை என்றார்.