கருணாநிதி பிறந்த நாளுக்கு அம்மா கடை இட்லி வாங்கி உடன்பிறப்புகளுக்குக் கொடுத்த ஒன்றியம்
ஜூன் 2ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் மலிவு விலை அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைத்தார்.
அடுத்த நாள் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளாகும். இதையொட்டி வேலூரில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் திமுகவினர் பிரமாண்டமாகக் கொண்டாடினர்.
அதில்தான் பெரும் வேடிக்கை நடந்தது. அதாவது அங்குள்ள அம்மா உணவகத்தில் தனது ஆதரவாளர்களோடு போன திமுக ஒன்றிய செயலாளர் ஏழுமலையின் மகனும், கவுன்சிலருமான சசிகுமார் அம்மா கேண்டீனில் இட்லி, வாங்கிக் கொடுத்துள்ளார் உடன் பிறப்புகளுக்கு.
3-ம் தேதி காலையில் கட்சிக்காரர்களோடு வந்த சசிகுமார், அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் 3,000 ரூபாயை கொடுத்து டோக்கன் கேட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமா டோக்கன் தர முடியாதுங்க என்று ஊழியர்கள் பிடிவாதம் செய்ய... என்னங்க நான் என்ன என் வீட்டுக்கு வாங்கிட்டுப் போறதுக்கா கேட்கிறேன். எங்க தலைவர் பிறந்த நாளு அன்னைக்கு நாலு ஏழை ஜனம் வயிறார சாப்பிட்டு அவரை வாழ்த்தணுங்க. தயவுசெய்து கொடுங்க என்று விடாப்பிடியாக கெஞ்ச... வேறு வழியில்லாமல் டோக்கனைக் கொடுத்திருக்கிறார்கள்.
பிறகு, அவரது வார்டு பகுதி மக்களை அழைத்துவந்து இன்னைக்கு நம்ம தலைவரோட பிறந்த நாளு. அதனால உங்களுக்கு அன்னதானம். அம்மா உணவகத்தில் போய் நல்லா சாப்பிடுங்க என்று கொடுக்க, மகிழ்ச்சியில் டோக்கனை வாங்கிச் சென்று இருக்கிறார்கள்.
இந்த செயலால் திமுகவினர் மட்டுமல்லாமல் அதிமுகவினரும் கூட டென்ஷனாகியுள்ளனராம்.
அம்மா மெஸ்ஸில் இனிமே மொத்தமா டோக்கனே கிடையாதுப்பா
திமுகவினர் இதேபோல சென்னையிலும் அம்மா உணவகத்தில் கொஞ்சக் காசை மட்டும் செலவு செய்து இட்லி உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்து கருணாநிதி பிறந்த நாளைக் கொண்டாடியதன் எதிரொலியாக இப்போது இட்லிக்கு மொத்தமாக டோக்கன் தருவதை நிறுத்தி விட்டனராம். இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாம்.
திமுகவினர் இப்படியே ஏதாவது குண்டக்க மண்டக்க செய்தால் ஒருவேளை அம்மா உணவகத்தையே மூடி விடுவார்களோ....!!!??