கருணாநிதி பற்றி அவதூறாக பேசிய போதும் வழக்கு போடவில்லை… விஜயகாந்த்

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இன்று காலை 11 மணிக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு விஜயகாந்த் வந்தார். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி நாகநாதன், வழக்கின் மறு விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பான்மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்களை தமிழ்நாட்டில் தடை செய்திருக்கிறார்கள், ஆனால் டாஸ்மாக் கடையை மூட மறுக்கிறார்கள். அதில் அதிக வருமானம் வருகிறது என்று மூட மறுக்கிறார்கள் அப்படியானால் பொதுமக்கள் சாராயத்தால் பாதிக்கப்பட்டால் பரவாயில்லையா?.
கலைஞர் ஆட்சியில் அவதூறாக பேசப்பட்ட போதெல்லாம் கருணாநிதி பொய் வழக்குகள் போடாமல் பெருந்தன்மையாக நடந்துக் கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மண்ணை கவ்வும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் வழக்கை மேல்முறையீடு செய்யப்படும் என்றும் விஜயகாந்த் கூறினார்.
கோபப்பட்ட விஜயகாந்த்
விஜயகாந்த் பேட்டி கொடுத்த போது, அங்கே வந்த திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் குணசேகரன், நீதிபதி உத்தரவுபடி கோர்ட் வளாகத்திற்குள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்று விஜயகாந்திடம் கூறினார். அதற்கு விஜயகாந்த் கோபமாக அவரை பார்த்து, அப்போ ஏன் என் வண்டியை உள்ளே விட்டீர்கள் என்று சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றார்.












Click it and Unblock the Notifications