குட்கா, பான்மசாலாவை போல டாஸ்மாக்கை ஏன் தடை செய்யவில்லை?: விஜயகாந்த் கேள்வி

கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 28ந் தேதி திருவண்ணாமலை காந்தி சிலை அருகே நடைபெற்ற விஜயகாந்தின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது தமிழக அரசையும் முதல்வரையும் அவதூறாகப் பேசினார் என்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜரானார் விஜயகாந்த். மேலும் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு பின்னர் வரும் ஆகஸ்ட் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக மண்ணை கவ்வும்
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வும். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை.
கருணாநிதியின் பெருந்தன்மை
திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார். ஆனால் கருணாநிதி அந்த விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். கருணாநிதியின் பெருந்தன்மை முதல்வர் ஜெயலலிதாவுக்கு வர வேண்டும் என்றார்.
டாஸ்மாக்கை ஏன் தடை செய்யலை?
பின்னர் செய்தியாளர்கள் சட்டசபையில் சஸ்பென்ட் செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்கள் 6 பேர் விவகாரத்தில் நீதிமன்றமே சரியான நடவடிக்கைதான் என்று குறிப்பிட்டதே எனக் கேள்வி எழுப்பியதற்கு, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறோம் என்றார். அதேபோல் குட்கா பான்மசாலா போன்றவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது நல்ல நடவடிக்கைதானே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அப்படியெனில் டாஸ்மாக்கை ஏன் தடை செய்யவில்லை என்று அவர் பதில் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications