கோவா பாஜக செயற்குழு- 2வது நாள் கூட்டத்தையும் புறக்கணித்தார் அத்வானி!

கோவா தலைநகர் பனாஜியில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் மற்றும் 2 நாள் செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை உடல்நிலையைக் காரணம் காட்டி புறக்கணித்திருந்தார் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. அவரைப் போல கட்சியின் மூத்த தலைவர்களான உமாபாரதி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை. மேலும் இன்று தொடங்கும் செயற்குழுக் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இன்று தொடங்கிய செயற்குழுக் கூட்டத்தை அத்வானி புறக்கணித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானதாலேயே அத்வானி, செயற்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி வரலாற்றிலேயே செயற்குழுக் கூட்டத்தை முதல் முறையாக தற்போதுதான் அத்வானி நிராகரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்வானியின் நிபந்தனை
மோடியை பிரசாரக் குழு தலைவராக்குவது என்பதை பாஜகவின் பல தலைவர்களும் முடிவு செய்திருக்கும் நிலையில் அத்வானி ஒரு புது நிபந்தனை ஒன்றை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மோடியை எப்படி லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுவுக்கு தலைவராக நியமிக்கிறீர்களோ அதேபோல் லோக்சபா தேர்தல் நிர்வாகக் குழுவுக்கு முன்னாள் தலைவர் நிதின் கத்காரியை நியமிக்க வேண்டும் என்பது அத்வானியின் புது நிபந்தனையாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது.
அத்வானியின் இந்த புதிய நிபந்தனையால் பாஜகவில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இந்த புது நிபந்தனை தொடர்பாகவும் பாஜகவின் தேசிய செயற்குழு விவாதிக்கக் கூடும். அதே நேரத்தில் அத்வானியின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துதான் உமாபாரதி, ஜஸ்வந்த்சிங் உள்ளிட்டோரும் செயற்குழுவைப் புறக்கணித்தனரா என்பது குறித்து உறுதியான கருத்துகள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications