அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்குக: வைகோ வலியுறுத்தல்
சென்னை: பருவமழை ஏமாற்றியதால் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வந்ததால், விவசாயம் முழுமையாக பொய்த்துப்போய்விட்டது. விவசாயிகள் தங்களின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த நிலங்களில் பயிர் செய்யமுடியாத நிலையில் விவசாயத்தை விட்டுவிட்டு, மாற்றுவழி தேடிச் செல்லத் தொடங்கியதன் விளைவாகத்தான் தமிழகத்தில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் குறைந்துவிட்டதையும், கிராமங்களில் மக்கள் தொகையும் மிகவும் குறைந்துவிட்டதையும், அதனால் நகர்புறத்தில் மக்கள் தொகை பெருகி விட்டதையும் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தைக் குறித்த கடுமையான அபாய அறிவிப்பு ஆகும்.
விவசாயம் இன்னும் குறைந்து பெரும் உணவு பஞ்சம் ஏற்படும். கோடிக்கணக்கான விவசாயிகள் வாழ்வு பாலைவனமாகிவிடும்.
இந்நிலையில், ‘தமிழகம் முழுவதுமே வறட்சி பரவி விட்ட மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்' என தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. ஆனால் தற்போது அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரணம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே கிராமங்களில் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு துளியளவு நிவாரணமும் கிடைக்கவில்லை. கிராம நிர்வாக அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பும் நடத்தவில்லை. வருவாய்துறை அதிகாரிகள் இதனை முறைப்படுத்தவும் இல்லை.
பயிர் காப்பீடுத் திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் என்பது எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு பயன்தராது. ஏன் எனில் பயிர் காப்பீட்டுத் திட்டம் என்பதே எங்கும் செயல்படுத்தப்பட்டது இல்லை. விவசாயிகள் அத்திட்டத்தில் சேர்ந்ததும் இல்லை. எனவே இந்த அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்ட நிலங்கள் குறித்த பயிர் எடுப்புக் கணக்கு பெரும்பாலும் கிராம நிர்வாக அதிகாரிகளால் முறையாகச் செய்யப்படவில்லை. எனவே, அந்தக் கணக்கைக் காட்டி விவசாயிகளின் கோரிக்கையை நிராகரிப்பது முற்றிலும் நியாயமற்றது ஆகும். உண்மையாகவே பயிர்கள் காய்ந்து செய்வது அறியாது திகைத்து நிற்கின்ற அனைத்து விவசாயிகளுக்குமே நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும்.
பலத்த அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்கும் விவசாயிகள் ஆளான போதிலும் பொறுமையைக் கடைப்பிடித்து ஆங்காங்கு வருவாய் துறை அதிகாரிகள் அலுவலகங்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கும் சென்று நிவாரணம் கோரி முறையிட்டு, அதற்கு எந்தப் பலனும் கிடைக்காமல் மனம் உடைந்து பரிதவிக்கின்றனர்.
விரக்தியில் வாழ்வே சூன்யமாகிவிட்டது என்று கலங்கித் தவிக்கும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டியதே அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
உணவகங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்க முன்வந்துள்ள அரசு, அந்த உணவு தானியங்களை உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் பஞ்சைப் பராரிகளைப் போல் பதறித் துடிப்பதை கருத்தில் கொண்டு முறையான கணக்கெடுப்பினை மீண்டும் நடத்தி, அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications