சென்னையில் காவல் நிலையத்தில் போலீசார், வக்கீல்கள் அடிதடி: பொதுமக்கள் வேடிக்கை
சென்னை: சென்னையில் காவல் நிலையம் ஒன்றில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இருதரப்பினரும் காயம் அடைந்தனர்.
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 13வது தெருவில் உள்ள செருப்பு கடையில் நேற்று பகல் நேரத்தில் கல்பனா என்பவர் செருப்பு வாங்கியுள்ளார். அவர் புது செருப்பை அணிந்து வீட்டுக்கு செல்வதற்குள் அது அறுந்துவிட்டது. இதையடுத்து கல்பனா, தனது அண்ணன் சுரேஷை அழைத்துக் கொண்டு அந்த செருப்புக் கடைக்கு சென்றார்.
வாங்கிய சிறிது நேரத்தில் செருப்பு அறுந்துபோனதால் புதிய செருப்பு தர வேண்டும் என்று கல்பனா கேட்டுள்ளார். அதற்கு கடைக்காரர் செருப்பை தைத்து தருகிறேன் புதிய செருப்பெல்லாம் தர முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
இதையடுத்து கல்பனா தனது அண்ணனுடன் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் கொடுத்தார். கல்பனா காவல் நிலையத்திற்கு சென்ற விவரம் அறிந்த கடைக்காரர் தனது வழக்கறிஞர் ஹேமநாத்துடன் அங்கு வந்து அவரும் புகார் கொடுத்தார். போலீசார் இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். கடைக்காரர் தான் கல்பனாவை ஆபாசமாக திட்டயதாக சுரேஷும், சுரேஷ் தான் கடைக்காரரை தாக்கியதாக வழக்கறிஞரும் தெரிவித்தனர்.
இதையடுத்து ஹேமநாத்துக்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமநாத் தனது வழக்கறிஞர் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அந்த காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வழக்கறிஞர்களுக்கும், நடராஜனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. வழக்கறிஞர்கள் இன்ஸ்பெக்டர் நடராஜனின் சட்டையைப் பிடித்து இழுத்தனர். இதில் அவரது சட்டை பட்டன்கள் அறுந்து விழுந்தன. தகராறு சத்தம் கேட்டு பக்கத்து அறைகளில் இருந்த போலீசார் ஓடி வந்தனர்.
இதையடுத்து வழக்கறிஞர்களும், போலீசாரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தகராறில் காவல் நிலைய வரவேற்பறையில் இருந்த 5 அடி உயர கண்ணாடி உடைந்தது. மேலும் டிவி, நாற்காலிகள், வாசலில் நின்றிருந்த ஜீப்பின் கண்ணாடி ஆகியவை உடைந்தன. இரவு 10 மணிக்கு துவங்கிய தாக்குதல் நள்ளிரவு 12 மணிவரை 2 மணிநேரம் தொடர்ந்து நடந்தது.
இந்த மோதலில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சோனமுத்து, அரவிந்த், ஜெயமூர்த்தி ஆகிய போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தவிர காயம் அடைந்த வழக்கறிஞர்கள் மைக்கேல், ரஞ்சித் ஆகியோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காவல் நிலையத்தில் போலீசாரும், வழக்கறிஞர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர்கள் கோவி மனோகரன், முருகேசன், ராஜேந்திர குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications