திருப்பூர் குமரனின் வளர்ப்பு மகன் தர்மலிங்கம் மறைவு
திருப்பூர்: சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் வளர்ப்பு மகன் தர்மலிங்கம் நேற்று காலமானார்.
கொடிகாத்த குமரன் என்றழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன்- ராமாயம்மாள் தம்பதியருக்கு வாரிசுகள் இல்லை. ராமாயம்மாளின் சகோதரி மீனாட்சி. அவரது கணவர் ரங்கசாமி. அவர்களுக்கு தர்மலிங்கம் மற்றும் சண்முகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
மேலும் இளம் வயதிலேயே மீனாட்சி இறந்துவிட்டார். இதனால் திருப்பூர் குமரன்- ராமாயம்மாள் தம்பதியினர் மீனாட்சியின் 2 குழந்தைகளையும் எடுத்து வளர்த்து வந்தனர்.
தர்மலிங்கம் திருப்பூரில் பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இந்த நிலையில் திருப்பூர் ஓடக்காட்டில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார். மறைந்த தர்மலிங்கத்திற்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மகன் ஒருவர் இறந்துவிட்டார்.
மறைந்த தர்மலிங்கம் உடலுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள், சமூக சேவகர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் நேற்று மாலை திருப்பூர் ரோட்டரி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications