ராஜ்யசபா தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல்

ராஜ்யசபாவிற்கு தமிழ் நாட்டில் இருந்து 6 பேரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமைத் தொடங்கி வரும் 17ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா முன்னாள் எம்.பி.யும், நாடாளுமன்றக் குழு துணைத் தலைவரும், அ.தி.மு.க. மாநில மருத்துவ அணி தலைவருமான டாக்டர் வா.மைத்ரேயன், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.அர்ஜுனன், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டி.ரத்தினவேல், விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டாக்டர் ஆர்.லட்சுமணன், அ.தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளர் எஸ்.சரவணப்பெருமாள் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திங்கட்கிழமை அறிவித்தார்.
இவர்களில், எஸ்.சரவணப்பெருமாள் நேற்று திடீரென மாற்றப்பட்டு அவருக்குப் பதில், அ.தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளருமான கு.தங்கமுத்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் 5 பேர் இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஜமாலுதீனிடம் அவர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.












Click it and Unblock the Notifications