அய்யய்யோ தந்தியா..! 160 ஆண்டு கால மக்களின் 'அலறல்' முடிவுக்கு வருகிறது!!
சென்னை: சார் தந்தி.... இந்தக் குரலைக் கேட்டாலே யாருக்கு என்ன ஆச்சோ என்றுதான் அச்சம் ஏற்படும். யாராவது மரணித்தாலோ, சீரியஸ் என்றாலோ மட்டுமேதான் தந்தி கொடுப்பார்கள் என்ற எண்ணம் பரவலாக இருந்ததுதான் காரணம்.
இந்தியாவில் கடந்த 160 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது தந்தி சேவை. உடனடி தகவல் பரிமாற்றத்திற்காக பலராலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட தந்தி சேவை, அறிவியல் வளர்ச்சி மற்றும் கால சுழற்சியில் வெகுவாக குறைந்துவிட்டது.
எதிர்கால சந்ததிகளுக்கு தந்தி சேவை என்றொரு சேவை இருந்தது பற்றி பள்ளிப் புத்தகங்களில் மட்டுமே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆம் ஜூலை 15ம் தேதியுடன் தந்தி சேவை நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தியின் வரலாறு
அமெரிக்காவின் சாமுவேல் மோர்ஸ் கடந்த 1837ம் ஆண்டு தந்தி முறையை கண்டறிந்தார். அதே கால கட்டத்தில் இங்கிலந்தின் குகி மற்றும் வீட்ஸ்டோன் ஆகியோரும் இதே முறையை உருவாக்கி, காப்புரிமை பெற்றனர்.
1845ம் ஆண்டு இங்கிலந்தில் தந்தி சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 1850ம் ஆண்டில் கொல்கத்தாவுக்கும் அதன் புறநகர் பகுதியில் உள்ள டைமண்ட் துறைமுகத்திற்கும் இடையே பரீட்சார்த்த முறையில் தந்தி சேவை தொடங்கப்பட்டது.

இந்தியாவில் தந்தி
1853ல் கொல்கத்தா, ஆக்ரா, மும்பை, சென்னை, ஊட்டி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையே 6,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு தந்தி சேவைக்கான தொலைத்தொடர்புக் கம்பிகள் நிறுவப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டே, தந்தி சேவைக்கான தனித்துறை இந்தியாவில் உருவாக்கப்பட்டது.பின்னர் 1870ல், இங்கிலந்துடன், கம்பி வடங்கள் மூலமாக இந்தியாவின் தந்தி சேவை இணைக்கப்பட்டது.

லட்சக்கணக்கான தந்திகள்
1980களில் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் தந்திகள் அனுப்பப்பட்டன. 1882ம் ஆண்டு தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 1991-92ம் ஆண்டுகளில் மட்டும் அதிகபட்சமாக ஆறரை கோடி தந்திகள் அனுப்பப்பட்டன. இந்த எண்ணிக்கை 1995-96ல் ஐந்து புள்ளி ஆறு கோடியாகவும், 2000 முதல் 2001ம் ஆண்டுகளில் மூன்றரை கோடியாகவும் சரிந்தது.

தமிழில் தந்தி
ஒரு தலைமுறைக்கு முந்தைய மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போனது இந்த தந்தி தகவல் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், திருமணம், வேலை, வாழ்த்து, இறப்பு என அத்தனை செய்திகளையும் தந்தி கொண்டு சேர்த்திருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டும் இருந்த நடைமுறை பின்னர் முன்னாள் எம்பி நல்லசிவம் நாடாளுமன்றத்தில் எடுத்த முயற்சியால் தமிழிலும் புழக்கத்தில் வந்தது.
ஆரம்பத்தில் தபால் தந்தித்துறையின் கீழ் இருந்த இந்த சேவை பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் வந்தது. தற்போது ஸ்மார்ட் போன், இ மெயில், எஸ்எம்எஸ், இ மெயில் போன்ற நவீன தொலை தொடர்பு சேவைகளின் வரவால் தந்தி சேவை ஓரங்கட்டப்பட்டது. நாளடைவில் டெலிகிராமுக்கு இருந்த வரவேற்பு குறைந்தது. பின்னர் படிப்படியாக முக்கியத்துவம் இழக்கத் தொடங்கி இன்றைக்கு முற்றிலுமாக மறைந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இன்றைய இளம் தலைமுறை பலருக்கு தந்தியின் பயன்பாடு, செயல்பாடு கூட தெரியாது. எதிர்காலத் தலைமுறையினர் தந்தியின் சேவை பற்றி இனி புத்தகங்களில் மட்டுமே அறிந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications