புதுவையில் மனநலம் குன்றிய இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற 2 பேர்
புதுச்சேரி: புதுவையில் மனநலம் குன்றிய இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
புதுவை முத்திரையர் பாளையம் அணைக்கரை வீதி கோவிந்தன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான பரசுராமன். அவரது மனைவி இந்திரா. அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூலித் தொழிலாளியாக உள்ளார். அவர்களுக்கு வெங்கடேசன், விக்னேஷ் என்ற மகன்களும், இளையபாரதி(21) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகளும் உள்ளனர்.
நேற்று காலை பரசுராமனும், இந்திராவும் வேலைக்கு சென்றுவிட்டனர். விக்னேஷ் பள்ளிக்கும், வெங்கடேசன் வெளியேவும் சென்றுவிட்டனர். இளையபாரதி பாட்டி, தாத்தா வீட்டில் இருந்தார். தாத்தாவுக்கு கண் பார்வை இல்லை. பாட்டி வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பக்கத்து வீட்டில் இருக்கும் குமார் என்பவர் தனது நண்பருடன் வந்து இளையபாரதியிடம் தண்ணீர் கோட்டுள்ளார்.
அவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தபோது குமாரும், அவரது நண்பரும் இளையபாரதியை கற்பழித்தனர். இதில் அந்த இளம்பெண் இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இருவரும் பிணத்தை வீட்டுக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் ஓடையில் புதைத்தனர். புதைக்கும் முன்பு இளையபாரதி அணிந்திருந்த கம்மல், கொலுசுகளை கழற்றி எடுத்துக் கொண்டனர்.
அக்கம் பக்கத்தில் ஆள்நடமாட்டம் இருந்ததால் பிணத்தை அவசர அவசரமாக புதைத்து அதன் மீது குப்பை, தென்னை மட்டைகளை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்நிலையில் வெளியே சென்ற பாட்டி வீட்டுக்கு வந்து தனது பேத்தியை பல இடங்களில் தேடினார். பின்னர் பக்கத்தில் எங்காவது போயிருக்கலாம் தானாக வருவார் என்று பாட்டி காத்திருந்தார்.
ஆனால் பிற்பகல் 3 மணிக்கு மேலும் தனது பேத்தி வராததால் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்து அவரை தேடுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது வீட்டுக்கு பின்புறம் தேடியபோது குப்பைக்கு இடையே இளையபாரதியின் உடை தெரிந்தது. இதையடுத்து அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது இளையபாரதியின் பிணம் கிடைத்தது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நேரம் பக்கத்து வீட்டு குமார் அந்த வழியாக வந்தார். அவர் மீது சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் அவரைப் பற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். உடனே போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் இளையபாரதியை தனது நண்பருடன் சேர்ந்து கற்பழித்தபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து குமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications