பெங்களூரில் தீவிரவாதிகள் ஊடுருவல் பீதி: போலீசாரின் சோதனையால் பரபரப்பு
பெங்களூர்: பெங்களூரில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக சந்தேகித்த போலீசார், ஓட்டல்கள், பொது இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் பெங்களூரும் ஒன்று. அதிலும் குறிப்பாக, தகவல் தொழில் நுட்பத்தில் பெங்களூர் சிறந்து விளங்குகிறது. எனவே, பெங்களூர் மீது தீவிரவாதிகள் கண் வைத்துள்ளதாக அவ்வப்போது மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.
தற்போது, பெங்களூர் நகருக்குள் குஜராத் மாநில தீவிரவாதிகள் நான்கு பேர் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் ஓட்டலில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியை அடுத்து, பெங்களூர் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும், ஏதேனும் ஹோட்டலில் தங்கியுள்ளார்களா என போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். மேலும், அரசு அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் மற்றும் விமான நிலையத்திலும், பொது இடங்களிலும் போலீசார் இரவு வேளையில் சோதனை நடத்தினார்கள்.
இந்த திடீர் சோதனை குறித்து பெங்களூர், சட்டம் ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறியதாவது, 'பெங்களூர் நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அவ்வாறு எந்த ஒரு தீவிரவாதியும் பெங்களூருக்குள் நுழையவில்லை. பெங்களூரில் உள்ள ஓட்டலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போவதாக உளவுத்துறையிடம் இருந்தும் எந்த ஒரு எச்சரிக்கையும் வரவில்லை.
தொலைக்காட்சியில் வெளியான தகவலால் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பொது மக்கள் மற்றும் ஓட்டல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போலீசாரின் கடமை ஆகும். அதன்படி, ஓட்டல்களில் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். அனைவருக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.
ஆனாலும், திடீரென்று நடத்தப்பட்ட போலீஸ் சோதனையால் பெங்களூர் ஓட்டல்கள் மற்றும் பொது இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications