காங்கிரஸ் நிர்வாக குழுவில் அதிரடி மாற்றம்: திருநாவுக்கரசர், செல்லக்குமாருக்கு பதவி
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர், செல்லக்குமாருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கு தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்ப்ட்டுள்ளன. இதன்படி காங்கிரஸ் கட்சியின் அனைத்து முன்னணி அமைப்புக்களையும் துணைத்தலைவர் ராகுல் காந்தி கவனித்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர 12 பொதுச்செயலாளர்கள், 42 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அஜய் மக்கான், சி.பி.ஜோஷி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஊடக பிரிவு, தகவல் தொடர்பு துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதன் தலைமை பொறுப்பு அஜய் மக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அஜய் மக்கானுக்கு உதவியாக செயலாளர் பொறுப்பில் பிரியா தத் எம்.பி. இருப்பார். சி.பி.ஜோஷிக்கு மேற்கு வங்காளம், அசாம், அந்தமான் நிகோபார் மாநில பொறுப்பு தரப்பட்டுள்ளது.

அம்பிகா சோனி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் பதவியில் அகமது பட்டேல் தொடர்வார். மோதிலால் வோரா பொருளாளராக தொடர்வார்.மேலும் அம்பிகா சோனி, ஷகீல் அகமது, குருதாஸ் காமத் ஆகியோரும் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அம்பிகா சோனி, சோனியாவின் அலுவலக பொறுப்பை தொடர்ந்து கவனிப்பார்.

திக்விஜய் சிங்
காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் மதுசூதன் மிஸ்த்ரிக்கு உத்தரபிரதேசம் மற்றும் மத்திய தேர்தல் குழு பொறுப்பும், ஷகீல் அகமதுவுக்கு டெல்லி, அரியானா, பஞ்சாப், சண்டிகார் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்குக்கு ஆந்திரா, கர்நாடகம், கோவா மாநில பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாநில பொறுப்பாளர்கள்
ஹரி பிரசாத்துக்கு சத்தீஷ்கார், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களின் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பக்த சரண்தாஸ், சுபாங்கர் சர்க்கார், தாராசந்த் பக்கோரா உதவுவார்கள்.
மராட்டியத்தை சேர்ந்த குருதாஸ் காமத்துக்கு குஜராத், ராஜஸ்தான் மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர்
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக முகுல் வாஸ்னிக் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் செயலாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி எஸ்.திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஏ.செல்லக்குமார் ஆகிய 2 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் நீக்கம்
கட்சியின் பொதுச்செயலாளர்களாக இருந்து வந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ், விலாஸ் முத்தம்வார், குலாம்நபி ஆசாத், வீரேந்தர் சிங், ஜெகதீஷ் டைட்லர் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

ப.சிதம்பரம்
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, முரளி தியோரா ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக தொடருவார்கள்.

காரியக்கமிட்டி
காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பு என கருதப்படுகிற காரிய கமிட்டியின் நிரந்தர அமைப்பாளர்களாக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங், மத்திய மந்திரி பெனி பிரசாத் வர்மா, சத்தீஷ்கார் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications