பாமக ஆதரவைக் கோரியது திமுக - அன்புமணியைச் சந்தித்தார் ஸ்டாலின்

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் நான்கு பேர் போட்டியிடுகின்றனர். சிபிஐ வேட்பாளர் டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு தருகிறது. 6வது இடத்துக்கு திமுக சார்பி்ல் கனிமொழியும், தேமுதிக சார்பில் ஏ.ஆர். இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.
இதில் தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ளது. அதேசமயம், கனிமொழியை வெற்றி பெற வைக்க திமுக தீவிரமாக முயன்று வருகிறது.
காங்கிரஸின் ஆதரவை தேமுதிக முறைப்படி கேட்டிருந்தாலும் கூட தேசிய அளவில் திமுக அதுதொடர்பாக ஏற்கனவே காய் நகர்த்தி வருகிறது. அதேபோல பாமகவின் ஆதரவையும் பெற திமுக முயற்சி எடுத்துள்ளது.
சட்டசபையில் திமுக வுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற மேலும் 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. சட்டசபையில் காங்கிரசுக்கு 5 எம்.எல்.ஏ.க்கள், பாமகவுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள், புதிய தமிழகம் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் ஆக மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இவர்களது ஆதரவைப் பெறுபவர்கள்தான் 6-வது எம்.பி. பதவியை பெற முடியும். இதை கருத்தில் கொண்டு இந்த கட்சிகளுடன் திமுகவும், தேமுதிகவும் பேச்சு நடத்தி வருகின்றன.
பாமக வசம் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுக்களை பெறும் முயற்சியில் நேற்று திமுக தீவிரமாக ஈடுபட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மூவரும் பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாசை நேற்று சந்தித்துப் பேசினார்கள். திமுகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொண்டனர்.
இதேபோல, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சிகளிடம் இருக்கும் 4 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுக்களை பெற திமுக நேற்று பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த இரு கட்சிகளும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தலா ஒரு இடத்தை கேட்டதாக தெரிகிறது. ஆனால் திமுக தர்பபில் இதுகுறித்து உறுதிமொழி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications