மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக போஸ்டர்: விருதுநகர் தொகுதியில் பரபரப்பு

வாழ்த்தோ, வசவோ அதை போஸ்டர் ஒட்டி தெரிவிப்பது தமிழ்நாட்டு தொண்டர்களின் வழக்கம். தற்போது இந்த போஸ்டர் யுத்தத்தில் சிக்கியிருப்பவர் மாஃபா பாண்டியராஜன்.
தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களது தொகுதி மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து வருகின்றனர். 6 பேர் ஏற்கனவே முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த வரிசையில் சமீபத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். தனது தொகுதியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும், ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்தார்.
இதனால் எரிச்சல் அடைந்துள்ள தேமுதிகவினர், மாஃபா பாண்டியராஜனை கண்டித்து விருதுநகரில் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர். அதில், "சட்டசபையில் அவமானப்படுத்தி அமர வைத்த அம்மா. அம்மாவிடமே சென்ற மானங்கெட்ட மாஃபா பாண்டியராஜனே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதேசமயம் பாண்டியராஜனுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். "தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற பாடுப்பட்டுக்கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையேற்ற மாஃபா பாண்டியராஜனின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கிறோம்" என்று போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
கட்சியினர் ஒருபுறம் இருக்க விருதுநகர் நகர் நல அமைப்பினரோ, "ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம் போன்றவற்றை முதல்வர் ஜெயலலிதாவினால்தான் செயல்படுத்த முடியும் என்ற விருதுநகர் மக்களின் முடிவை ஏற்று செயல்பட்ட மாஃபா பாண்டியராஜனை வாழ்த்துக்கிறோம்" என்று வாழ்த்துப் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.
விருநகர் தொகுதியில் முக்கிய நகர் பகுதிகளில் இதுபோன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications