வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை காக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பெருமழை பெய்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மத்திய அரசின் சார்பில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரகாண்ட், இமாசலப் பிரதேச முதல்வர்களுக்கு மத்திய அரசின் சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை ஒதுக்கியிருப்பதாகத் தெரிகிறது.
புனித தலங்களான கேத்ரிநாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து 52 பேரும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 37 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்றிருக்கிறார்கள். இவர்கள் சென்ற பாதை திடீரென்று துண்டிக்கப்பட்டதால், வனப் பகுதியிலும், அங்குள்ள கிராமத்திலும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன.
தரை வழியாக வருவதற்கு அவர்கள் வழியில்லா நிலையில் கெலிகாப்டர் மூலமாக அவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று தொலைபேசி வாயிலாக செய்தி கிடைத்துள்ளது. தற்போது தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் துண்டிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
இந்தப் பிரச்சினை பற்றி நான் கூறியதன் பேரில் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பத்ரிநாத் சென்றுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தரவேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார்.
சுற்றுலா மேற்கொண்டுள்ள தமிழர்களின் உறவினர்கள் மிகுந்த துயரத்தோடு இருக்கிறார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக துரித முயற்சிகளை மேற்கொண்டு 'கெலிகாப்டர்' மூலமாக அவர் களை மீட்டு, தமிழகத்திற்குப் பத்திரமாக வந்து சேருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications