தனியார் நர்சரி பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் இனி கட்டாயம்: ஹைகோர்ட்
சென்னை: ப்ரி கேஜி, எல்.கே.ஜி. யு.கே.ஜி வரை உள்ள நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 7,000த்திற்கும் அதிகமான நர்சரி, துவக்கப் பள்ளிகளும் 4,500க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும் 650க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் செயல்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் அடிப்படை வசதியில்லை என கூறி 900 பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள பள்ளிகளை மூட, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு வந்தது.
பெரும்பாலும் அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டதாகக் கூறி இப்பள்ளிகளை மூடி வரும் நிலையில் தமிழகத்தில் "கிண்டர் கார்டன்', "ஆப்பிள் கிட்ஸ்', "ஆரஞ்ச் இன்டர்நேஷனல் ஸ்கூல்', "பிளே ஸ்கூல்', "பப்ளிக் ஸ்கூல்' என பல பெயரில் மழலையர் பள்ளிகள் செயல்படுகின்றன.
இதில், பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இரண்டு மணி நேரம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு, 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் அரசின் அங்கீகாரமின்றிதான் இப்பள்ளிகள் செயல்படுகின்றன.
பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படும் இப்பள்ளிகளை அரசு கண்காணிப்பதில்லை என்றும் பொறியியல் படிப்பு கட்டணத்தை விட அதிக பணம் வசூலிக்கும் இப்பள்ளிகளை முறைப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இவற்றையெல்லாம் முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அரசின் நடவடிக்கை ஆளான ஒரு மழலையர் பள்ளி சார்பில் உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மழலையர் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தேவையில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும், தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டப்படி மழலையர் பள்ளிகளுக்கும் அரசின் அங்கீகாரம் கட்டாயம் தேவை என்றும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications