ராஜ்யசபா தேர்தல்.. பாமக புறக்கணிப்பால் கனிமொழிக்கு பின்னடைவா?

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுக அணியில் 5 எம்.பிக்கள் வெற்றி உறுதியாகி இருக்கிறது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.
திமுகவுக்கு 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும் தலா 2 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தற்போது திமுகவுக்கு 27 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது,
தேமுதிகவுக்கு மொத்தம் 29 எம்.எல்.ஏக்கள் இருந்த போதும் 7 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணியில் இருக்கின்றனர். இதனால் 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் உள்ளது.
தேமுதிகவும் திமுகவும் 5 எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸ் ஆதரவைக் கோரியுள்ளன. இதேபோல் 3 எம்.எல்.ஏக்களைக் பாமகவின் ஆதரவை திமுக கோரியிருந்தது. ஆனால் திமுகவை ஆதரிக்க பாமக மறுத்து தேர்தலை புறக்கணித்துள்ளது.
பாமகவின் 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவு திமுகவுக்கு கிடைத்திருந்தால் 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்திருக்கும். ஒருவேளை 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ், தேமுதிகவை ஆதரித்தாலும் கூட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கும். ஆனால் தற்போது பாமக கைவிட்டுவிட்ட நிலையில் இது ஒருவகையில் கனிமொழிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தயவையே இரு கட்சிகளும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
5 ஆண்டுகாலத்துக்கும் முழுமையாக ஆதரவு தராததால் திமுக மீது காங்கிரஸ் தலைமை கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியே தேமுதிகவை காங்கிரஸ் ஆதரித்தால் அதிமுக வசம் இருக்கும் தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களே வெற்றி- தோல்வியை தீர்மானிக்கக் கூடியவர்களாக இருப்பர். காங்கிரஸ் முடிவைப் பொறுத்தே தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களை அதிமுக களம் இறக்கும் என்றும் கூறப்படுகிறது. காங்கிரசின் முடிவு நாளை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications