ராஜ்யசபா தேர்தல்.. திடீர் பரபரப்பை ஏற்படுத்திய முகுல் வாஸ்னிக்.. இன்று காங். முடிவு?

ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவும் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர். அதிமுக அணியில் 5 பேரின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் 6வது எம்.பி. இடத்துக்கு 27-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. திமுக வேட்பாளருக்கு மொத்தம் 27 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளுமே 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவை கோரியுள்ளன.
காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் தேமுதிக வேட்பாளரைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி தலைமையிடம் கூறியுள்ளனர். இருப்பினும் சிலர் சர்ச்சையைத் தவிர்க்க ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வாக்களிக்காமல் தவிர்க்கலாம் என்றும் யோசனை கூறியுள்ளனர். திமுக வேட்பாளரை ஆதரித்து லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கலாம் என்பது இன்னொரு தரப்பினரின் கருத்து. காங்கிரஸ் மேலிடமோ அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்த பிறகு தனது முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் திடீர் பரபரப்பாக ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் சென்னையில் இன்று ஆலோசனை நடத்த வருகை தருகிறார் என்று ஒரு தகவல் பரவியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவிலேயே காங்கிரஸின் ஆதரவு யாருக்கு என அறிவிக்கப்படும் என்றெல்லாம் தகவல்கள் பரவியது.
ஆனால் சென்னைக்கு நேற்று இரவு வருகை தர இருந்த முகுல் வாஸ்னிக் தமது பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டு கேரளா புறப்பட்டுச் சென்றார். அதே நேரத்தில் டெல்லியில் முகுல் வாஸ்னிக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் நேற்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் தேமுதிகவை ஆதரிக்க வேண்டும் என்று ஞானதேசிகன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே முகுல் வாஸ்னிக் கேரளா புறப்பட்டுச் சென்றார். முன்பு அவர் தமது சுற்றுப்பயணத் திட்டத்தை சென்னை வழியாகக் கேரளா செல்லும் வகையில் திட்டமிட்டிருந்தார்..
எப்பத்தான் முடிவு அறிவிப்பாங்க?












Click it and Unblock the Notifications