ரூ.4 லட்சம் கோடியை வரி பாக்கியை வசூலிக்காமல் என்.எல்.சி. பங்குகளை விற்பதா?- விஜயகாந்த் கேள்வி

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்.எல்.சி 5 சதவிகித பங்குகளை விற்று 466 கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அரசின் நிதி நிலையை ஈடுகட்ட இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆனால், என்.எல்.சி உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பெருமளவு தமிழ்நாடு நம்பி இருக்கிறது. இன்று 5 சதவிகிதம் பங்குகள் என்று ஆரம்பித்து படிப்படியாக அரசின் பொது நிறுவனமான என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாக்கப்படுமானால், தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வதற்கு வழி உண்டு.
இந்திய அரசின் இந்த முயற்சியை எதிர்த்து என்.எல்.சி. தொழிலாளர்களும், அதிகாரிகளும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். பொதுத்துறையை தனியார் மயமாக்கும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்திய அரசின் இந்த முயற்சியை கைவிடவேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கேட்டுக்கொண்டும், இதை உதாசீனப்படுத்துவது இந்திய அரசுக்கு நல்லதல்ல. அமைச்சர் நாராயணசாமி அரசியல் காரணங்களுக்காக இதை எதிர்ப்பதாகக் கூறுவது வேண்டுமென்றே திரித்துக் கூறுவதாகும்.
சுமார் 10 லட்சம் மோடி ரூபாய்க்கு மேல் வரவு, செலவு செய்யும் இந்திய அரசுக்கு 466 கோடி ரூபாய் ஒரு பெரிய தொகை அல்ல. மேலும், இந்திய அரசின் சார்பில் அரசுக்கு வரவேண்டிய வரி பாக்கியே 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் என்று இன்று அறிக்கை வந்துள்ளது. அந்த வரி பாக்கியை ஒழுங்காக வசூலித்தாலே, இந்திய அரசின் நிதிநிலை எவ்வளவோ மேம்பாடு அடைந்திருக்கும். வரி பாக்கி வைத்திருப்பவர்கள் வசதியுள்ளவர்களே தவிர, ஏழைகள் அல்ல. பணக்காரர்களிடம் இருந்து பெற வேண்டிய வரியை வசூலிக்க தவறிவிட்டு, என்.எல்.சி. போன்ற பொது நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது என்ன நியாயம்? ஆகவே, நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications