அமெரிக்க வங்கியின் அறிவிப்பால் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த தங்க விலை
சிங்கப்பூர்: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் தற்போது மெதுவாக சரிவில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி பிற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை நிறுத்திக் கொள்வதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அமெரிக்க அரசு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டத் துவங்கிவிட்டனர். இதனால் தங்கத்தின் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது.
உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தவுடன் மக்கள் தங்கத்தில் ஓடி, ஓடி முதலீடு செய்ததால் அதன் விலை விண்ணைத் தொட்டது. தற்போது தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால் அதன் விலையும் சரிந்து கொண்டிருக்கிறது.

3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இந்த வாரத் துவக்கத்தில் இருந்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது.

தங்கத்திற்கு கிராக்கி இல்லை
கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபோது ஆசியாவில் இருந்த அதிக கிராக்கியால் இழப்பீடு சரி செய்யப்பட்டது. ஆனால் தற்போது தங்கத்தின் தேவை குறைந்துவிட்டது.

இந்தியாவிலேயே தங்கத்தின் தேவை குறைந்தது
ஷாங்காய் கோல்டு பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் இன்று தங்கத்தின் விலை 3 சதவீதம் சரிந்துள்ளது. தங்கத்தை மக்கள் வாங்குவதை குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு விதித்துள்ள புதிய விதிமுறைகளால் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆபரணத் தங்க நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் குறைந்தது
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000க்கும் விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications