சென்னையில் ரவுடிகளுக்கு கிடுக்கிப் பிடி… ஒரு வாரத்தில் 52 பேர் கைது
சென்னை: சென்னையில் கடந்த ஒரு வார காலத்தில் 52 ரவுடிகள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் தேடப்பட்டு வந்த பல முக்கிய ரவுடிகளை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகரில் சுற்றித் திரியும் ரவுடிகளை, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த ஒரு மாத காலமாக சென்னையில் உள்ள ரவுடிகளையும், சிறையிலிருந்து வெளியே வந்த ரவுடிகளையும் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வரும் ரவுடிகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த ரவுடிகள் தடுப்பு பிரிவின் ஆய்வாளர்கள் ரயாசுதீன், சிவராம்குமார், ஆப்ராம் குருஸ் மற்றும் வேலு ஆகியோர் அடங்கிய தனிப்படையினரின் தீவிர கண்காணிப்பின் பேரில், கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் பல்வேறு இடங்களில் தேடப்பட்டு வந்த 5 முக்கிய ரவுடிகளான கண்ணன், ஆல்பர்ட், சந்திரன் (எ) சந்துரு (எ) லொட்டை சந்துரு, மதுரை செந்தில் மற்றும் மின்ட் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்கிரிகள் தடுப்பு பிரிவு
கடந்த ஒரு மாத காலமாக போக்கிரிகள் தடுப்பு பிரிவினரின் தீவிர தேடுதல் வேட்டையில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டும், 8 ரவுடிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தும் உள்ளனர். இந்த வகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 52க்கும் மேற்பட்ட ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னையில் 27 ரவுடிகள் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications