'பதம் பார்க்கும்' சிக்கன் விலை… ஹோட்டல்களில் பிரியாணி விலை உயர்வு!!
சென்னை: சென்னையில் கறிக்கோழிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த சில வாரங்களாகவே கறிக்கோழி எனப்படும் பிராய்லர் கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோழிக்கறியின் விலை மளமள வென உயர்ந்தது. மே மாத இறுதியில் 1 கிலோ கோழிக்கறி ரூ.160க்கு விற்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோழி தட்டுப்பாடு காரணமாக மட்டன், மீன் விலையும் உயர்ந்துள்ளது.

பிரியாணி விலை உயர்வு
இதனால் அசைவ ஓட்டல்களுக்கு போதிய அளவு மட்டன்-சிக்கன் கிடைக்காததால் உணவு வகைகளின் விலை உயரத் தொடங்கி விட்டது. 1/2 பிளேட் பிரியாணி ரூ.90-ல் இருந்து ரூ.100ஆக உயர்ந்துள்ளது. முழு பிளேட் பிரியாணி ரூ.180-ல் இருந்து ரூ.200ஆகி விட்டது. இதேபோல் தந்தூரி, சில்லி சிக்கன் உள்பட அனைத்து வகை கோழிகறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
சாலையோர கடைகளில் கால் பிளேட் சிக்கன் பிரியாணி இதற்கு முன்பு ரூ.45-க்கு கிடைத்தது. ஆனால் இப்போது 10 ரூபாய் உயர்ந்து 55 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கோழி விலை உயர்ந்துள்ளதால் நாங்களும் விலை உயர்த்த வேண்டி உள்ளது என்று ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். கறிக்கோழி தவிர பிரியாணிக்கு தேவைப்படும் தக்காளி, இஞ்சி போன்ற பொருட்களின் விலையும் அதிகமாகி விட்டதால் பிரியாணி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விட்டதாக அவர்கள் கூறினர்.
பிரியாணியின் தரம்தான் எங்களுக்கு முக்கியம். அதனால் தரத்தை குறைக்காமல் வழங்குவதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பிரியாணி வாங்குகிறார்கள். 10 ரூபாய் அதிகம் என்றாலும் அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.
பிரியாணி விலை உயர்ந்தாலும் பிரியாணி கடைகளில் கூட்டம் குறைய வில்லை. எப்போதும்போல் வியாபாரம் நடைபெறுகிறது.
சிக்கன், மட்டன், மீன் விலை உயர்வு காரணமாக அசைவப்பிரியர்கள் பாடுதான் திண்டாட்டமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications