Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலகிரியில் கனமழை: மலை ரயில் நிறுத்தம்… பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Subscribe to Oneindia Tamil

Rains lash Nilgiris in Tamil Nadu; flood alert issued
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 955 மி.மீ. மழை பெய்துள்ளது. கனமழை நீடித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவலாஞ்சியில் அதிக அளவாக 254 மி.மீ மழை பெய்துள்ளது.

கூடலூரில் வீடுகள் சேதம்

கூடலூர் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால், கூடலூரை அடுத்த 2-ஆவது மைல் பகுதிக்கு உள்பட்ட தட்டக்கொல்லி குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 வீடுகள் சேதமடைந்தன. தொடர்ந்து அப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 955 மி.மீ. மழை பதிவாகியுள்ளது இதைத்தொடர்ந்து, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மலை ரயில் நிறுத்தம்

மழையினால் சாலைகள் சேதமடைந்துள்ளன. மலை ரயில் பாதையில் லாரி கவிழ்ந்துள்ளதால் இன்று காலை முதல் உதகமண்டலம் மழை ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

வால்பாறை மிதக்கிறது

கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சிலோன் காலனி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 2 வீடுகளும், காமராஜர் நகர் பகுதியில் ஒரு வீடும் சேதமடைந்தன. புதிய பஸ் நிலையம் அருகே நல்லகாத்து எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தை மழைநீர் சூழ்ந்தது. அப்பகுதியில் இருந்த பல குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின.

நிரம்பும் நீர்த்தேக்கங்கள்

தமிழக-கேரள எல்லையையொட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை நீர்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முக்காலி, பரணி, முல்லி வன நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நீர் அவலாஞ்சி, எமரால்டு நீர்த்தேக்கங்களில் கலந்துவிடுவதால், நீர்வரத்து அதிகரித்து நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தெங்குமரஹாடா வனத்திலும் கனமழை பெய்து வருவதால் மோயாற்று வெள்ளமும் பவானிசாகர் அணையில் கலப்பதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 12 ஆயிரத்து 249 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 51.54 அடியாக உயர்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+