பணம் கேட்டு மகன் மிரட்டியதால் விரக்தி: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிப்பு...
வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மகன் மீது புகார் கொடுக்க வந்த வியாபாரி ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா குப்பிடிசாத்தம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 60) சாலையோரத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார்.
கலெக்டர் அலுவலகம் வந்த அவர் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக காத்திருந்தார். அப்போது கலெக்டர் சங்கர், 20 அம்ச திட்ட ஆய்வு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் குப்புசாமி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் அமர்ந்திருந்தார்.
விரக்தியில் இருந்த அவர் திடீரென தான் பையில் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் சத்தம் போட்டார். இதனை கண்ட பொதுமக்கள், அரசு அதிகாரிகள் திடுக்கிட்டனர். குப்புசாமி உடலில் எரிந்த தீயை அணைத்தனர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து கலெக்டர் சங்கர் அவசரமாக கீழே வந்து குப்புசாமியை பார்வையிட்டார். தீக்காயத்தால் துடித்த குப்புசாமி தான் வைத்திருந்த மனுவை கலெக்டரிடம் கொடுத்தார். உடனே வரவழைக்கபட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குப்புசாமியை சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீக்குளித்த விவசாயி குப்புசாமி மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். சொந்தமாக வீடு உள்ளது. வங்கியில் பணம் சேமித்துள்ளேன். எனது மகன் ராஜா வீடு, பணத்தை கேட்டு அடித்து உதைக்கிறார். ரவுடிகளை அழைத்து வந்து மிரட்டுகிறார். அவர்களிடமிருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
மனு மீது விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் நிறைந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் வியாபாரி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications