மகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் மோடி சந்திப்பு- கத்காரி புறக்கணிப்பு! உத்தவ் உடன் ஆலோசனை!!
மும்பை: லோக்சபா தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்காக மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுடன் குஜராத் முதல்வரும் பாஜகவின் தேசிய பிரசாரக் குழுத் தலைவருமான நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
கோவாவில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் லோக்சபா தேர்தலுக்கான தேசிய பிரசாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். பின்னர் அண்மையில் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் உத்தர்காண்ட் மாநிலத்தில் பாஜகவினரை இணைத்து பெருவெள்ளத்தால் சிக்கியோரை மீட்கும் பணிகளை முடுக்கிவிட்டிருந்தார்.
பின்னர் பஞ்சாப் மாநிலத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து மகராஷ்டிரா மாநில பாஜகவினருடன் மோடி இன்று ஆலோசனை நடத்தினார் .மும்பையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, மாநில பாஜக தலைவர் தேவேந்திர பாதன்விஸ், மகாராஷ்டிர மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கத்காரி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
உத்தவ் தாக்கரேயுடன் சந்திப்பு
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து மோடிக்கு எதிராக அவ்வப்போது எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிற சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரேவையும் மோடி சந்தித்தார். அத்வானிக்கு ஆதரவாக சிவசேனை செயல்படுவதாக கருதப்படும் நிலையில் அக்கட்சியின் தலைவரை நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications