ராஜ்யசபா தேர்தல் வாக்குப் பதிவை தொடங்கி வைத்த ஜெயலலிதா!

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. சட்டசபை குழுக்கள் கூடும் கூட்ட அறையில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. 6 எம்.பி. இடங்களுக்குப் போட்டியிடும் 7 வேட்பாளர்களுக்கும் தனித்தனி வாக்குப் பகுதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கட்சி ஏஜெண்டுகள்
இத்தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் செம்மலை, தி.மு.க சார்பில் கம்பம் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஜான் ஜேக்கப், தே.மு.தி.க சார்பில் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பாக்கியம், மனித நேய மக்கள் கட்சி சார்பில் கம்சுதீன், புதிய தமிழகம் கட்சி சார்பில் வக்கீல் பாஸ்கர் மதுரம், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் கட்சிகள் சார்பிலான ஏஜெண்டுகளாக இருந்தனர்.
வாக்குச் சாவடி ஏஜெண்டுகள்
இத்தேர்தலில் வாக்குச்சாவடி ஏஜெண்டுகளாக அ.தி.மு.க சார்பில் தம்பித்துரை, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தி.மு.க. சார்பில் எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆறுமுகம் ஆகிய 4 பேர் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு எல்.எல்.ஏயும் தாங்கள் யாருக்கு வாக்களித்துள்ளோம் என்பதை ஏஜெண்டிடம் காண்பித்தனர்.
இந்த வாக்குப் பதிவு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் முன்னிலையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 9 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கினாலும் சுமார் 11.30 மணிக்குப் பின்னர்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஜெயலலிதா வாக்களிப்பு
சுமார் 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தமது வாக்கைப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என வாக்களித்தனர். அ.தி.மு.கவைச் சேர்ந்த 151 எம்.எல்.ஏக்களும் தலா 34 எம்.எல்.ஏக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். இந்த ஒவ்வொரு குழுவுக்கும் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அனைவரும் அந்தந்த வேட்பாளருக்குத்தான் வாக்களித்தனரா என கண்காணிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications