சென்னையில் 7 வது மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் எஞ்ஜினியர் தற்கொலை
திருப்போரூர்: சென்னையில் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் பெண் ஊழியர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருபவர், தேவதாஸ் ஜான் சந்திரன். இவரது மகள் மெர்ஸி சத்தியராணி (வயது 25), சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
நேற்று வேலைக்கு வந்த அவர் யாரிடமும் பேசாமல் விரக்தி அடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 4½ மணியளவில் 7-வது மாடியில் உள்ள தனது அறையில் இருந்த கண்ணாடி ஜன்னலை திறந்து திடீர் என்று அவர் கீழே குதித்து விட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தால் சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டனர். பின்னர் அவர்கள் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மெர்ஸி சத்தியராணி தரையில் மோதி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மெர்ஸி சத்திய ராணி தற்கொலை செய்தது பற்றி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேல் அதிகாரிகள் கொடுத்த தொந்தரவு அல்லது காதல் பிரச்சினையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications