தமிழக இளைஞர்கள் இருவரின் மரண தண்டனை ரத்து: குவைத் நீதிமன்றம் அதிரடி
துபாய்: குவைத்தில், கொலை குற்றம் சாட்டப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த இருவரின், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் பெற்றோர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம், முத்துபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 30. கும்பகோணத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 32. இவர்கள் கடந்த, 2008ம் ஆண்டிலிருந்து, குவைத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த, 2008ல், இலங்கையை சேர்ந்த பாத்திமா என்ற பெண் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில், சுரேஷ், காளிதாஸ், இலங்கையை சேர்ந்த நித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், நித்யாவுக்கு ஆயுள் தண்டனையும், சுரேஷ், காளிதாசுக்கு மரண தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 18ம் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனையிலிருந்து இவர்களை மீட்கும் படி இருவரது குடும்பத்தினரும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை கேட்டிருந்தனர். இதற்கிடையே, இருவரது மரண தண்டனை தேதி, ஜூன்16ம் தேதியாக மாற்றப்பட்டது.
தூதரக அதிகாரிகளின் முயற்சியினால், பாத்திமா குடும்பத்துடன், தூதரக அதிகாரிகளும், குவைத் அதிகாரிகளும் பேசினர். உரிய இழப்பீட்டை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாத்திமா குடும்பத்தினருக்கு, கணிசமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, குறைந்த பட்ச தண்டனை வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதை அடுத்து சுரேஷ், காளிதாஸ் உறவினர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications